சட்டப்பூர்வமாக திட்டம் போட்டு பா.ஜனதாவால் செய்யப்பட்ட ஊழலே தேர்தல் பத்திர நிதி சேகரிப்பு:முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு


சட்டப்பூர்வமாக திட்டம் போட்டு பா.ஜனதாவால் செய்யப்பட்ட ஊழலே தேர்தல் பத்திர நிதி சேகரிப்பு:முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 April 2024 1:15 AM GMT (Updated: 6 April 2024 9:16 AM GMT)

சட்டப்பூர்வமாக திட்டம் போட்டு பா.ஜனதாவால் செய்யப்பட்ட ஊழலே தேர்தல் பத்திர நிதி சேகரிப்பு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றவில்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டுகிறாரே. 2021 தேர்தல் அறிக்கையில் சொன்ன 505 வாக்குறுதிகளில் இதுவரை எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது?.

பதில்:- மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட முதன்மையான வாக்குறுதிகளையும் கணக்கில்கொண்டால் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். எடப்பாடி பழனிசாமி அரசு தமிழ்நாட்டின் நிதி நிலைமையை அதலபாதாளத்தில் கொண்டு போய் தள்ளியதால், அதில் இருந்து இந்த 3 ஆண்டுகளில் மெல்ல மெல்ல மீண்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். இன்னும் ஒரு சில வாக்குறுதிகளையும் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் நிறைவேற்றுவோம்.

தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் போன்ற பல்வேறு திட்டங்களும் மக்களுக்கு பயன் தந்து வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்காமல் அபாண்டமாக பேசுவது பரிதாபமாக உள்ளது.

கேள்வி:- 'இந்தியா' கூட்டணி தலைவர்களில் ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை தொடரும் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறி வருகிறார். இதை எந்த வகையில், 'இந்தியா' கூட்டணி எதிர்கொள்ளப்போகிறது?.

பதில்:- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஹேமந்த் சோரனுக்கும் உள்ள அளவுகோல் ஏன் பா.ஜனதாவில் சேரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களிடம் கடைபிடிக்கப்படுவதில்லை?. கர்நாடகத்தின் குவாரி ஊழல் புகழ் ரெட்டி சகோதரர்களில் தொடங்கி, மராட்டியம், மேற்கு வங்காளம் என ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள் பா.ஜனதாவுக்கு வந்ததும் ஒரே நாளில் 'வாஷிங் மெஷினில்' துவைப்பதுபோல 'கிளீன் இமேஜ்' கொடுக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட 'சீட்' கொடுக்கப்படுகிறதே அது எப்படி? பா.ஜனதாவுக்கு தாவியவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டில் நடவடிக்கை என்ன? இதைத்தான் 'இந்தியா' கூட்டணி மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் முன்வைத்து வெற்றி பெறும்.

கேள்வி:- 'இந்தியா' கூட்டணியில் நிறைய பிளவு ஏற்பட்டுள்ளதே. உதாரணத்துக்கு வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜா போட்டியிடுகிறார். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தனியாக போட்டியிடுகிறார். இதேபோல், மேலும் சில மாநிலங்களிலும் பிரச்சினை இருக்கிறது. எப்படி கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைக்கப் போகிறீர்கள், தேர்தலில் எப்படி வெற்றி பெற முடியும்?

பதில்:- தமிழ்நாட்டில் காங்கிரசும் இடதுசாரிகளும் ஒரே கூட்டணியில் இடம் பெறுவது புதிதல்ல. அதற்கு காரணம், தி.மு.க தலைமையின் அணுகுமுறை. கேரளா அரசியல் சூழல் இதில் இருந்து மாறுபட்டது. அதுபோலத்தான் மேற்கு வங்காளமும். 'இந்தியா' கூட்டணியைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் எங்கள் கூட்டணியில் அதிக வெற்றி வாய்ப்புள்ள கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிடுவது என்றும், எக்காரணம் கொண்டும் பா.ஜனதாவுக்கு வாய்ப்பளித்து விடக்கூடாது என்பதுதான் முதன்மையான நோக்கம். தேர்தல் முடிவுகளில் அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

கேள்வி:- போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறதே?. பிப்ரவரி 15 முதல் மார்ச் 15 வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 402 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 1,827 கிலோ கஞ்சா பறிமுதலும் செய்யப்பட்டு உள்ளது. போதைப்பொருளைத் தடுக்க அரசு வகுத்துள்ள திட்டம் என்ன?.

பதில்:- அ.தி.மு.க. ஆட்சியில்தான் குட்கா போதை பொருள் விற்பனை தொடர்பாக அமைச்சர் மீதும் டி.ஜி.பி மீதும் வழக்கு பதியப்பட்டது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திடவும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்திடவும் தி.மு.க அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நானே பல ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, போதைப் பொருட்கள் ஒழிப்பில் தனிக்கவனம் செலுத்தி வருகிறேன். நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள கைது நடவடிக்கையும், கஞ்சா பறிமுதலும் அதைத்தான் காட்டுகிறது. இளைஞர்களிடம் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தையும் மேற்கொண்டுள்ளது இந்த அரசு. இதைத்தாண்டி, 'நார்கோட்டிக்' வகை போதைப் பொருட்கள் குஜராத் மாநில துறைமுகங்களில் இருந்துதான் இந்தியா முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது என்பது ஆதாரங்களுடன் நிரூபணமாகியுள்ளது.

இத்தகைய போதைப் பொருட்களை நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பது மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள போதை கட்டுப்பாட்டு அமைப்பான என்.சி.பி.தான். எனவே, பல துறைகளிலும் வளர்ந்துள்ள மாநிலமான தமிழ்நாட்டை, போதை கேந்திரம் என பா.ஜனதாவும் அதனுடன் சேர்ந்தவர்களும் குற்றம்சாட்டுவது, தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய முதலீடுகளை தடுப்பதற்கும், தமிழர்களின் வளர்ச்சியைக் கெடுப்பதற்குமான முயற்சிகள்தான்.

கேள்வி:- தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜனதா உள்பட அனைத்து கட்சிகளும் நன்கொடை பெற்றிருக்கிறது. தி.மு.க.வும் நன்கொடை பெற்றிருக்கிறது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு சில கருத்துகளை சொல்லியிருக்கிறது. இவ்வாறு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறுவதை சீரமைக்க உங்களின் யோசனை என்ன?.

பதில்:- தி.மு.க.வைப் பொறுத்தவரை, அது களம் கண்ட 1957 தேர்தல் முதலே கட்சியினரிடமும் பொதுமக்களிடமும் தேர்தல் நிதி வசூலித்து, அதற்கு முறையான கணக்கையும் சமர்ப்பித்து வருகிற கட்சியாகும். தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க. பெற்ற நிதியும் வெளிப்படையானது. அதனால்தான், எங்கள் கட்சியின் பொருளாளர் அந்த விவரங்களைப் பொதுத்தளத்தில் வெளியிட்டார். ஆனால், பா.ஜனதா இந்த தேர்தல் பத்திரங்களை தன்னுடைய நுட்பமான ஊழலுக்குப் பயன்படுத்தி இருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய பா.ஜனதா அரசு, தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட வேண்டியதில்லை என்று வாதிட்டது. சுப்ரீம் கோர்ட்டு கண்டித்த பிறகுதான் உண்மைகள் வெளிவந்தன. இப்போது பிரதமர் மோடி, தேர்தல் பத்திரங்கள்தான் வெளிப்படைத்தன்மையான நிதி திரட்டலுக்கு உதவுகிறது என்கிறார். அந்த வெளிப்படைத்தன்மைக்கு மாறாக நீதிமன்ற வாதத்தில் மறைக்க முயன்றது ஏன்?

பா.ஜனதாவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி தந்த பல நிறுவனங்கள் 'ரெய்டு' நடவடிக்கைக்கு உள்ளாகியிருப்பதையும், அந்த நடவடிக்கைக்குப் பிறகே அவை தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜனதாவுக்கு நிதி அளித்துள்ளன என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், பா.ஜனதாவால் சட்டப்பூர்வமாகத் திட்டம் போட்டு செய்யப்பட்ட ஊழலே, தேர்தல் பத்திர நிதி சேகரிப்பு என்கிற உண்மை புலப்படும்.

கேள்வி:- பா.ஜனதா, தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கிறது. தி.மு.க. அமைச்சர் ஒவ்வொருவரும் ஊழல் செய்கிறார்கள் என்று பட்டியலிடுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள்?.

பதில்:- ரூ.7½ லட்சம் கோடி முறைகேடு என்று பா.ஜனதா அரசு மீது மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் குழு குற்றம்சாட்டியுள்ளது. ஆயுஷ்மான் எனும் மருத்துவத் திட்டம் முதல் நெடுஞ்சாலைகள் அமைப்பது வரை இந்தியா முழுவதும் ஊழலில் திளைப்பது பா.ஜனதாதான். அதை மறைக்க, தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைப்பது பா.ஜனதாவின் வழக்கம். ''யோக்கியரு வர்றாரு.. சொம்பை எடுத்து உள்ளே வை'' என்கிற கிராமத்து மக்கள் மொழி பா.ஜனதாவினருக்குத்தான் கச்சிதமாகப் பொருந்துகிறது.

கேள்வி:- தி.மு.க. தலைவராக இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள். தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை ஒப்பிட்டு, அவர்களின் செயல்பாடுகள் பற்றி கூற முடியுமா?.

பதில்:- யாரையும் யாருடனும் ஒப்பிட முடியாது. அவரவர் கட்சி சார்ந்து செயல்படுவதுதான் ஜனநாயகத்தின் தன்மை. இதில், தி.மு.க. எப்போதும் எவருடனும் ஒப்பிட முடியாத தனித்துவமான பேரியக்கம்.

கேள்வி:- தமிழக அரசில், மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை ஊழல் நடக்காமல் இருப்பதை கண்காணிக்கவும், அதைத் திறன்படத் தடுத்து நிறுத்தவும் என்ன திட்டத்தை செயல்படுத்துவீர்கள்?.

பதில்:- திராவிட மாடல் அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. பத்திரப்பதிவு தொடங்கி, பட்டா வழங்குதல், சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பலவும் ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்படுவதால் ஊழலுக்கு இடமில்லை. அரசின் ஒவ்வொரு திட்டமும் கடைக்கோடி மக்கள் வரை சரியாகப் போய்ச் சேந்திருக்கிறதா என்கிற கண்காணிப்புடனேயே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இனியும் அப்படியே செயல்படும்.

கேள்வி:- வரிப் பகிர்வில் தமிழகம் ஒரு ரூபாய் மத்திய அரசாங்கத்துக்கு தந்தால், 29 பைசாதான் திரும்ப வருகிறது என்று கூறுகிறீர்கள். இதை அதிகரித்துப் பெற தமிழக அரசும், தி.மு.க.வும் என்ன முயற்சிகளை எடுக்கும்?

பதில்:- தி.மு.க.வின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையின் 50-வது அம்சமாக, மாநில அரசிடம் இருந்து பெறப்படும் நிதியில் 42 சதவீதம் முதல் 50 சதவீதம் வரிப் பங்கீடு மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க நிதிக்குழுமம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், செஸ் எனப்படும் மேல்வரியை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப் பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைச் செயல்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்போது, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் நிதி உரிமை பாதுகாக்கப்படும்.

கேள்வி:- நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சி யார்? என்று நினைக்கிறீர்கள். அ.தி.மு.க.வா? பா.ஜனதாவா?.

பதில்:- பேரறிஞர் அண்ணா காலத்தில் தொடங்கி, கலைஞர் கருணாநிதி காலத்திலும் தற்போதும் தி.மு.க. யாரையும் எதிரியாகப் பார்ப்பதில்லை. சமூகநீதிக்கு எதிரானவர்கள் எங்களின் எதிரிகள், மதநல்லிணக்கத்தின் எதிரிகள் எங்கள் எதிரிகள். மாநில உரிமைகளின் எதிரிகள் எங்கள் எதிரிகள். அந்த வகையில் கருத்தியல் ரீதியாக பா.ஜனதா என்பது இந்தியா முழுமைக்குமே எதிரிதான். தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, பா.ஜனதாவுக்கு நம் மக்கள் எந்தவித முக்கியத்துவமும் தர மாட்டார்கள். அ.தி.மு.க.தான் சட்டமன்றத்தில் எங்களுக்கு எதிர்க்கட்சி.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


Next Story