வேட்புமனு தாக்கலின்போது வாழ்த்துகளை பரிமாறிய தமிழச்சி தங்கப்பாண்டியன் - தமிழிசை சவுந்தரராஜன்


வேட்புமனு தாக்கலின்போது வாழ்த்துகளை பரிமாறிய தமிழச்சி தங்கப்பாண்டியன் - தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 25 March 2024 11:34 AM GMT (Updated: 25 March 2024 12:37 PM GMT)

தென்சென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும் பா.ஜ.க. வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகின்றனர்.

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தென்சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியனும், பா.ஜ.க. சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும், நாம் தமிழர் சார்பில் தமிழ்செல்வியும், அ.தி.மு.க. சார்பில் ஜெயவர்தனும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனும், பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனும் தென்சென்னை தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இரு வேட்பாளர்களும் ஒரேநேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய இருவரும் அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story