பா.ஜ.க. ஆண்டதும் போதும்.. மக்கள் மாண்டதும் போதும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


பா.ஜ.க. ஆண்டதும் போதும்.. மக்கள் மாண்டதும் போதும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 3 April 2024 2:25 PM GMT (Updated: 3 April 2024 2:47 PM GMT)

இந்தியாவில் சமூகநீதி நீடிக்க வேண்டும்; ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோரை ஆதரித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் பிரசாரம் செய்தார்.

பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை கடந்த தேர்தலை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் இம்முறை வெற்றி பெற வைக்க வேண்டும். தி.மு.க.வையும் திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது; இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது இங்குதான். தி.மு.க.விற்கு திருவண்ணாமலை என்றாலே வெற்றி தான். தி.மு.க. வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் தி.மலை மக்கள் உறுதுணையாக உள்ளனர். பல்வேறு சிறப்புகளை கொண்டது திருவண்ணாமலை மாவட்டம்.

இந்த தேர்தல் களம், இரண்டாவது விடுதலைப் போராட்டம். இந்தியா என்ற அழகிய நாட்டை, அழித்திவிடாமல் தடுக்க, ஜனநாயக போர்க்களத்தில் 'இந்தியா' கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஜனநாயக போர்க்களத்தில் மனசாட்சியும் மக்களுமே என்றும் எஜமானர்கள். இந்தியாவில் சமூகநீதி நீடிக்க வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.

பா.ஜ.க. ஆண்டதும் போதும்.. மக்கள் மாண்டதும் போதும். சமூகநீதி காக்க ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும் பொய், புரளியை கிளப்பி வாக்கு வாங்க நினைக்கிறார் பிரதமர் மோடி. அரசியல் சட்டம் காக்க, பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை முதலில் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.

உத்தர பிரதேசத்தில் போய் கச்சத்தீவு பற்றி பேசும் போதே, பிரதமர் மோடி குழப்பத்தில் இருப்பது தெரிகிறது. இது ஏப்ரல் மாதம்தான், மோடியின் குழப்பம் ஜூன் மாதத்தில் தீர்ந்துவிடும். ஜூன் 3-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நிறைவு, ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடுதலையின் தொடக்கம்.

10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? என தொடர்ந்து மக்களின் குரலாக கேட்டு வருகிறேன். ஆனால், அங்கிருந்து எந்த பதிலும் இல்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் அமலாக்கத்துறை கைதுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என பிரதமர் மோடி ஒரு உருட்டு உருட்டியிருக்கிறார். அந்த உருட்டில் பேட்டி எடுத்தவர்களே ஆடிப்போயுள்ளனர். அந்த பேட்டியை பார்த்தவர்கள் இது நியூஸ் டைமா அல்லது காமெடி டைமா என குழம்பிவிட்டனர்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை பிச்சை என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். இது மாதிரி பதில் அளிப்பதற்காகவே, அவரை பிரதமர் மோடி மந்திரியாக வைத்திருக்கிறார். சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெளிநாட்டு வங்கிகள் கடன் அளிக்கின்றன. அதை திரும்ப செலுத்தப் போவது தமிழ்நாடு அரசுதான். ஆனால், நிர்மலா சீதாராமன் கணக்கு கேட்கிறார்.

மிக்ஜம் புயல், தென்மாவட்ட மழை வெள்ளம் ஆகிய பேரிடர்களுக்கு மாநில அரசு நிதியைதான் கொடுத்தோம். எதற்குமே நிதி கொடுக்காத நிதி மந்திரி நிர்மாலா சீதாராமன், பிரதமர் மோடியைப் போல வாயாலே வடை சுடுகிறார். மக்களை தப்பு கணக்கு போடாதீர்கள்; நீங்கள் சொல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

பேரிடர் நடந்தாலும் நடக்காவிட்டாலும் ஆண்டுதோறும் வழங்கக்கூடிய மாநில பேரிடர் நிவாரண நிதியைக் கொடுத்துவிட்டு, வெள்ள பாதிப்புக்கு நிதி கொடுத்தோம் என்று கூறுவது கரகாட்டக்காரன் படத்தில் வரும் அதுதான் இது என்ற வாழைப்பழ காமெடியை நினைவூட்டுகிறது.

பக்தர்கள் போற்றும் அரசாகவும், அற்பர்கள் கதறும் அரசாகவும் தி.மு.க. அரசு இருக்கிறது. ரூ.5,000 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகளை மீட்டுள்ளோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. பழம்பெரும் 112 கோவில்களில் பழமை மாறாமல் திருப்பணிகள் நடத்தப்படுகின்றன. இறைவனின் கோவிலில் சமத்துவம் இருக்க வேண்டும் என அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.

ஆளுங்கட்சியாக இருக்கும் போது, எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக பா.ஜ.க.வை எதிர்ப்பதாக பேசுவார். மக்களால் புறக்கணிக்கப்பட்டு எதிர்க்கட்சியான பிறகு, எதிர்க்கட்சி ஏன் பா.ஜ.க. அரசை எதிர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசுவார்.

ஜெயலலிதா அம்மையார் இறந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் என நாடகம் நடத்த, கூவத்தூர் கவனிப்புகளால், தரையில் ஊர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரானார். பிறகு ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனுக்கு பரப்புரை செய்தார். பிறகு ஓ.பி.எஸ். உடன் சேர்ந்து டிடிவி தினகரனுக்கு எதிராக பரப்புரை செய்தார்.

அடுத்ததாக பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாட்டர் பாட்டில் மரியாதை அளிக்கப்பட்டது. ஓ.பி.எஸ். நேரடியாக பா.ஜ.க. கூட்டணியில் சேர, எடப்பாடி பழனிசாமி கள்ளத்தனமாக அந்த கூட்டணியில் இருக்கிறார். இவர்கள் அனைவருமே தமிழ்நாடு மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் இவ்வாறு அவர் கூறினார்.


Next Story