கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா


கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா
x

கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பிலிருந்து எஸ்.டி. குமார் ராஜினாமா செய்துள்ளார்.

ஓசூர்,

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக வருகிற 26-ந்தேதி மற்றும் மே 7-ந் தேதி நடைபெற உள்ளது. முதல்கட்டமாக பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மத்தி, பெங்களூரு புறநகர், கோலாா், சிக்பள்ளாப்பூர், துமகூரு, சித்ரதுர்கா, உடுப்பி-சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, மைசூரு, ஹாசன், மண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

இந்த முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்தலை பா.ஜனதாவும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இது மட்டுமின்றி பகுஜன் சமாஜ் உள்ளிட்ட சிறு கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து தலைவர்கள், வேட்பாளர்கள் தேர்தல் பிரசார களத்தில் குதித்துள்ளனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகா மாநில அ.தி.மு.க. செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாததால் அதிருப்தியில் ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து எஸ்.டி.குமார் ஓசூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை. தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் மாநில செயலாளர் பதவியில் இருந்து விலகிக்கொண்டேன். யாரை ஆதரித்து பிரசாரம் செய்வதென்று தெரியாமல் கர்நாடகா அ.தி.மு.க.வினர் குழப்பத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கர்நாடகா அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிற மாநிலங்களில் ஏன் அ.தி.மு.க.வை வளர்க்க வேண்டும் என மேலிடம் நினைப்பதாகவும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கர்நாடகாவில் இருக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை மதிப்பளிப்பதில்லை எனவும் நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story