தேர்தல் பிரசாரத்தின்போது திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி


தேர்தல் பிரசாரத்தின்போது திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி
x

மராட்டியத்தில் 2-ம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

மும்பை,

நாட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மராட்டியத்தை பொறுத்தவரையில், 5 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19-ம் தேதி, 5 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக நாளை மறுநாள் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான நிதின் கட்கரி யவத்மாலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டார். யவத்மால் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி போட்டியிடுகிறது.

பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டீலுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, நிதின் கட்கரி, மேடையில் திடீரென மயங்கி விழுந்தார். நல்வாய்ப்பாக அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிய இடைவெளிக்கு பிறகு, உடல் நலம் தேறிய நிதின் கட்கரி மேடையில் தனது உரையை தொடங்கினார்.

இது குறித்து நிதின் கட்கரி எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

மராட்டிய மாநிலம் புசாத் நகரில் நடைபெற்ற பேரணியின் போது வெப்பம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் இப்போது நான் முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளேன், அடுத்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன். உங்கள் அன்பிற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.


Next Story