தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
x

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் நேற்று (19-ந்தேதி) அதிகாலை கரையை கடந்தது.

இதற்கிடையே, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல, தெற்கு குஜராத் - வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் வடகிழக்கு - தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று (20-ந்தேதி) முதல் வரும் 25-ந்தேதி வரையில் 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.

வரும் 23-ந்தேதி வரையில் மத்திய வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம். நேற்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 9 சென்டி மீட்டர், பந்தலூர், நடுவட்டம் பகுதிகளில் 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story