உ.பி.யில் உறுதியானது காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி: 11 தொகுதிகளில் சுமூக உடன்பாடு - அகிலேஷ் யாதவ் தகவல்


உ.பி.யில் உறுதியானது காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி: 11 தொகுதிகளில் சுமூக உடன்பாடு - அகிலேஷ் யாதவ் தகவல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 27 Jan 2024 10:06 AM GMT (Updated: 27 Jan 2024 10:13 AM GMT)

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொண்டு உ.பி.யில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் வகுக்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணிகள் சார்பில் நடந்த தொகுதி பங்கீட்டில் சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "உத்தரப் பிரதேசத்தில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் 11 தொகுதிகளில் காங்கிரசுடன் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெறும். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் நலனைக் கருத்தில் கொண்டு தேர்தல் வியூகம் வகுக்கப்படும்" என்று அதில் அகிலேஷ் யாதவ் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பீகார் முதல்-மந்திரியும் , ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், மீண்டும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பலாம் என்ற வலுவான அறிகுறிகளுக்கு மத்தியில் இந்த தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பும் பட்சத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணி பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.


Next Story