இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமை ; உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்


இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமை ; உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்
x

இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மராட்டிய முதல்-மந்திரியாக செயல்பட்டு வந்தார்.

இதனிடையே, சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விளக்கிக்கொண்டனர். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது.

பின்னர், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுடன் இணைந்து மராட்டியத்தில் ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே மராட்டிய முதல்-மந்திரியானார்.

அதன்பிறகு சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சின்னமான வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார். உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று வாதத்தை முன்வைத்தது.

இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியும், கட்சி சின்னமான வில்-அம்பும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை, உத்தவ் தாக்கரே அணி சிவசேனா உத்தவ் பாலசாகிப் தாக்கரே அணி என்ற பெயரையும், தீ பந்தம் சின்னத்தையும் வைத்துக்கொள்லாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டதற்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர உள்ளதாக உத்தவ் தெரிவித்தார்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே இன்று தனது வீட்டின் முன் கூடியிருந்த ஆதவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடியின் அடிமையான தேர்தல் ஆணையம் இதற்கு முன் செய்யாததை செய்துள்ளது. ஆதரவாளர்கள் அனைவரும் பொறுமைகாக்க வேண்டும். மும்பை உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக வேண்டும். கட்சி சின்னம் திருடப்பட்டுள்ளது. திருடர்களுக்கு பாடம் புகட்டப்பட வேண்டும்' என்றார்.


Next Story