சகோதரிக்கு டி.வி. திருமண பரிசா...? மனைவி, உறவினர் தாக்கியதில் கணவர் பலி


சகோதரிக்கு டி.வி. திருமண பரிசா...? மனைவி, உறவினர் தாக்கியதில் கணவர் பலி
x

சகோதரிக்கு திருமண பரிசாக எல்.இ.டி. தொலைக்காட்சி மற்றும் தங்க மோதிரம் வழங்க விரும்பிய நபரை அவருடைய மனைவி, உறவினர்கள் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாராபங்கி,

உத்தர பிரதேசத்தின் பாராபங்கி நகரில் காதராபாத் பகுதியில் வசித்து வந்தவர் சந்திர பிரகாஷ் மிஷ்ரா. இவருடைய மனைவி ஷியாம மிஷ்ரா. இந்நிலையில், சந்திர பிரகாஷ் தன்னுடைய சகோதரிக்கு எல்.இ.டி. தொலைக்காட்சி மற்றும் தங்க மோதிரம் ஆகியவற்றை திருமண பரிசாக வழங்க விரும்பியுள்ளார்.

எனினும், இதற்கு மனைவி ஷியாம மிஷ்ரா எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். உடனே தன்னுடைய சகோதரர் மற்றும் உறவினர்களை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். அவர்கள் வீட்டுக்கு வந்து சந்திர பிரகாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விசயத்தில் நீங்கள் ஏன் உள்ளே வருகிறீர்கள் என சந்திர பிரகாஷ் கேட்டதும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதில், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு அவர்கள் சந்திர பிரகாஷை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்து உள்ளார். சம்பவம் பற்றி தகவல் அறிந்து போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் சந்திர பிரகாஷை மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவத்தில் சந்திராவின் மனைவி, சகோதரர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரிக்கு எல்.இ.டி. தொலைக்காட்சி மற்றும் தங்க மோதிரம் ஆகியவற்றை திருமண பரிசாக வழங்க விரும்பிய நபரை அவருடைய மனைவி, உறவினர்கள் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story