போதைப்பொருட்கள் அற்ற தமிழ்நாடு என்ற நிலையை எட்ட காவல்துறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி


போதைப்பொருட்கள் அற்ற தமிழ்நாடு என்ற நிலையை எட்ட காவல்துறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 11 March 2024 6:25 AM GMT (Updated: 11 March 2024 6:40 AM GMT)

தமிழ்நாட்டில் செய்யப்படும் பல்வேறு போதைப்பொருள் பறிமுதல்கள், மத்திய அமைப்புகளால்தான் செய்யப்படுகின்றன.

சென்னை,

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 110 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ ஹசீஸ் என்ற போதைப்பொருளும், 874 கிலோ கஞ்சாவும் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டது.

அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் தனக்கு தும்மல் வந்தாலும் நான் பதவி விலக வேண்டும் என்று சொன்ன இன்றைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு தார்மீக பொறுப்பேற்று இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன்?

அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து குரல் கொடுத்து, அரசின் கவனத்திற்கு பல்வேறு விஷயங்களைக் கொண்டு வந்த சமூகப் பொறுப்பாளர்கள் பலர், தற்போது தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள இந்த போதைப்பொருள் விவகாரத்தில் மவுனமாக இருப்பது ஏன்?

தமிழ்நாட்டில் செய்யப்படும் பல்வேறு போதைப்பொருள் பறிமுதல்கள், மத்திய அமைப்புகளால்தான் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு காவல்துறை, கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் முதல்-அமைச்சரைப் போலன்றி, துரிதமாக நடவடிக்கை எடுத்து போதைப்பொருட்கள் அற்ற தமிழ்நாடு என்ற நிலையை எட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story