ஒலிம்பிக் வாய்ப்பை இழந்த இந்திய மகளிர் ஆக்கி அணி..!


ஒலிம்பிக் வாய்ப்பை இழந்த இந்திய மகளிர் ஆக்கி அணி..!
x

image courtesy; twitter/ @TheHockeyIndia

தினத்தந்தி 19 Jan 2024 1:59 PM GMT (Updated: 19 Jan 2024 2:01 PM GMT)

ஒலிம்பிக் தகுதி சுற்றில் இன்று நடைபெற்ற 3-வது இடத்திற்கான போட்டியில் இந்திய அணி ஜப்பானிடம் தோல்வியடைந்தது.

ராஞ்சி,

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இதில் மகளிர் ஆக்கியில் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிக்கு பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, சீனா, அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 6 அணிகள் 2 தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படுகின்றன. தகுதி சுற்றில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும்.

இதன் ஒரு தகுதி சுற்று போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஜெர்மனி, ஜப்பான் (ஏ பிரிவு), அமெரிக்கா, இந்தியா (பி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி சுற்றின் முடிவில் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றன. அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் 3-வது இடத்திற்கான போட்டியில் இன்று மோதின.

இதில் வெற்றி பெற்றால் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறமுடியும் என்ற சூழலில் இந்திய அணி களமிறங்கியது. ஆட்டம் தொடங்கிய முதலே பரபரப்பாக நடைபெற்றது. இதில் முதல் பாதியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இந்திய அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஜப்பான் அணி தரப்பில் உரட கணா வெற்றிக்குரிய அந்த கோலை அடித்தார். இந்த வெற்றியின் மூலம் ஜப்பான் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணியின் ஒலிம்பிக் கனவு இதோடு முடிவுக்கு வந்தது.

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடி வருகின்றன.


Next Story