நெல்லையில் பணம் பறிப்பு வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லுர், சந்தையடியூர் 1வது தெருவைச் சேர்ந்த அப்பாத்துரை மகன் அன்பழகன் (வயது 51) என்பவர் 8.12.2025 அன்று தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலூகா, சேரகுளம், சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மகாராஜன் என்பவரை பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் மிரட்டி பணம் பறித்துள்ளார்.
மேற்சொன்ன வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த அன்பழகன் என்பவர் திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், போலீஸ் உதவி கமிஷனர் (சந்திப்பு சரகம்) சரவணன், மற்றும் திருநெல்வேலி இருப்புப்பாதை காவல் வட்ட இன்ஸ்பெக்டர் பிரியாமோகன் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி 23.12.2025 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.






