

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி தலைமையில் போலீசார் நேற்று சிவகாசி சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே பைக்கில் சென்றவரிடம் சோதனை நடத்தினர்.
அதில் அந்த நபரிடம் கேரள அரசின் லாட்டரி சீட்டுகள் இருப்பதும், அந்த நபர் ஆரியங்காவில் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த கழுகுமலை அரண்மனை வாசல் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் சோமு (வயது 73) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 46 லாட்டரி சீட்டுகள், ரூ.5,400, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.