டிசம்பர் 5-ல் ஜெயலலிதா நினைவு நாள்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார்

சென்னையில் டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நினைவிட நுழைவு வாயில் உட்புறம் அதிமுக சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
டிசம்பர் 5-ல் ஜெயலலிதா நினைவு நாள்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார்
Published on

அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக மக்கள் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் இதய தெய்வம், புரட்சித் தலைவி, முன்னாள் முதல்-அமைச்சர், அம்மா ஜெ.ஜெயலலிதா நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 5.12.2016. காலத்தால் அழியாத புரட்சிகரமான பல்வேறு திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்திய அம்மாவின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும். தன்னலம் கருதாது, தமிழ்நாட்டு மக்களுக்காக தன் மதிநுட்பத்தையும், உழைப்பையும் அர்ப்பணித்துப் பாடுபட்ட நம் பாசத்திற்குரிய அம்மா அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு கழகத்தினரின் இன்றியமையாத கடமையாகும்.

அந்த வகையில் அம்மாவின் 9-ம் ஆண்டு நினைவு நாளான 5.12.2025, வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அம்மாவின் நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர், புரட்சித் தமிழர் எடப்பாடி மு.பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்த உள்ளனர்.

அதனையடுத்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு, நம் இதய தெய்வம் அம்மாவுக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அம்மா அவர்களின் நினைவு நாளான 5.12.2025 அன்று, அம்மாவைப் பற்றிய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும், அம்மாவை நினைவு கூறும் வகையில், அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே அம்மாவின் உருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்டக் கழகச் செயலாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து செய்திட வேண்டும்.

அதேபோல் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் 5.12.2025 அன்று ஆங்காங்கே அம்மாவின் உருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com