

"கணினிவெளிச் சட்டக்குற்றவாளியான" கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், கிடங்காயத்தைச் சேர்ந்த மிக்தாத் மகன் ராசித் (வயது 27) என்பவர் திருநெல்வேலி மாநகரில் ஆன்லைன் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என பொது மக்களை நம்பச் செய்து போலியான வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்த ஆசையைத் தூண்டியுள்ளார். மேலும் அவர் ஆன்லைன் மோசடி செய்து பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றும் செயலில் ஈடுபடுவதன் மூலம் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்துள்ளார்.
இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தலைமையிடம்) விஜயகுமார், போலீஸ் உதவி கமிஷனர் (பொறுப்பு சைபர் கிரைம்) செந்தாமரைக்கண்ணன், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி நேற்று ராசித் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.