தூத்துக்குடி: குடும்பத் தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கைது

தூத்துக்குடி பூபாண்டியாபுரத்தில் கணவன் மனைவிக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள பூபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகுமுத்து மகன் சரவணன். இவர் அ.சண்முகபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியர் பூபாண்டியாபுரத்தில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜயலட்சுமியின் உறவினர்களான தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த செல்வன் மகன் அந்தோணிஜேசுராஜ் (வயது 27), அ.சண்முகபுரத்தை சேர்ந்த பால்ராஜ் மகன்கள் குமார்(50), முனியசாமி(47), ஆறுமுகம்(30) ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது அவர்கள் 4 பேரும் சேர்ந்து சரவணனின் தந்தை அழகுமுத்து(45), தங்க மாரியப்பன் மகன் மாரீஸ்வரன்(20), மகாராஜா மகன் மார்க்கண்டேயன்(22) மூன்று பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த மார்க்கண்டேயன் உட்பட 3 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அந்தோணி ஜேசுராஜ், முனியசாமி, குமார், ஆறுமுகம் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






