திருநெல்வேலி: செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியில் ஒரு பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2015-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், பணகுடி காவல் நிலைய சரகம், பாம்பன்குளம் அருகே, ஒரு பெண்ணிடம் செயின் பறித்தல் குற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது வள்ளியூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தளவாய்புரத்தை சேர்ந்த மதன் (வயது 22) மற்றும் அழகிய நம்பியாபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்(21) ஆகிய 2 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதித்துறை நடுவர் மோசஸ் ஜெபஸ்டின் நேற்று குற்றவாளிகளுக்கு, செயின் பறித்தல் குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், பணகுடி காவலர்கள், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் (தற்போது ஓய்வு), குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஆலன் ராயன் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார். நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.






