திருநெல்வேலி: கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை


திருநெல்வேலி: கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x

காவல்கிணறு பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் முன் விரோதம் காரணமாக ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி காவல் நிலைய சரகம் காவல்கிணறு அருகே கடந்த 2014-ம் ஆண்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் முன் விரோதம் காரணமாக, காவல்கிணறு பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ரமேஷ் (வயது 26) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பணகுடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் குற்றவாளிகளான காவல்கிணறு பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் எடிசன்(47), இருதயகிங்ஸ்டன்(46), நாகர்கோவிலை சேர்ந்த பாபு(50) ஆகிய 3 பேருக்கும் எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிபதி செல்வம் நேற்று (21.11.2025) குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கினார்.

தண்டனை விபரம் பின்வருமாறு:

IPC 302-ன்படி ஆயுள் தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதம், IPC 506 (ii)-ன்படி 7 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.1,000 அபராதம், IPC 341-ன்படி 1 மாதம் சிறை தண்டனை ரூ.500 அபராதம், IPC 294 (b)-ன்படி 3 மாதங்கள் சிறை தண்டனை ரூ.500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மேலும் அவர் இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டாவது குற்றவாளியான இருதய கிங்ஸ்டனுக்கு கூடுதலாக IPC 323-ன்படி ஒரு வருடம் சிறை தண்டனை ரூ.1,000 அபராதம் விதித்துள்ளார். மேலும் மேற்சொன்ன தண்டனைகளை குற்றவாளிகள் 3 பேரும் ஏக காலத்தில் (concurrent) அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் இவ்வழக்கில் திறம்பட சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், பணகுடி காவல்துறையினர், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபால் பர்னபாஸ் (தற்போது EOW, நாகர்கோவில்), நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 25 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 83 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 24 பேர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆண்டில் மட்டும் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 30 பேருக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் கொலை வழக்கில் 24 நபர்களுக்கும். கொலை முயற்சி வழக்கில் 2 நபர்களுக்கும். போக்சோ வழக்கில் 3 நபர்களுக்கும். கூட்டுக் கொள்ளை வழக்கில் 1 நபருக்கும் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story