இந்த மந்திரவாதி எங்கு மறைந்திருந்தார்? - ராகுல்காந்தி மீது பிரதமர் மோடி விமர்சனம்


இந்த மந்திரவாதி எங்கு மறைந்திருந்தார்? - ராகுல்காந்தி மீது பிரதமர் மோடி விமர்சனம்
x

இந்த மந்திரவாதி எங்கு மறைந்திருந்தார்? என்று ராகுல்காந்தியை பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

போபால்,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் பா.ஜ.க. இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம் ஹஷாங்காபாத் நகரில் இன்று பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி காங்கிரஸ், ராகுல்காந்தியை விமர்சித்து பேசினார்.

கடந்த வாரம் ராஜஸ்தானின் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல்காந்தி, காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஒற்றை நடவடிக்கையால் நாட்டில் உள்ள வறுமையை ஒழிப்போம் என்று கூறினார். அவரது பேச்சை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

மத்தியபிரதேசத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியை விமர்சித்து பிரதமர் மோடி பேசியதாவது,

ஒற்றை முடிவால் நாட்டில் வறுமையை ஒழித்துவிடுவோம் என்று காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி) கூறிய உறுதிமொழியால் ஒட்டுமொத்த நாடும் ஆச்சரியமடைந்துள்ளது. அதேவேளை, இத்தனை நாட்களாக இந்த மந்திரவாதி (ராகுல்காந்தி) எங்கு மறைந்திருந்தார் என்று நாட்டு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நாடு சுதந்திரம் அடைந்தபின்னர் ஒரு கட்சியை சேர்ந்த குடும்பம் பல ஆண்டுகளாக மத்தியில் நேரடியாகவும், ரிமோர்ட் கண்ட்ரோல் மூலமும் அரசை நடத்தியது.

அந்த குடும்பம் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தது. தேவை ஏற்படும்போது அந்த குடும்பம் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சீட்டு கட்டுபோல் அழித்தது. காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் மிகவும் ஆபத்தான தேர்தல் உத்தரவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையால் நாட்டின் நிதி நிலை திவால் ஆகிவிடும்

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story