உங்களுக்குத்தான் தூக்கம் தொலைந்துவிட்டது - பிரதமர் மோடிக்கு தி.மு.க. பதிலடி


உங்களுக்குத்தான் தூக்கம் தொலைந்துவிட்டது - பிரதமர் மோடிக்கு தி.மு.க. பதிலடி
x
தினத்தந்தி 19 March 2024 2:34 PM GMT (Updated: 19 March 2024 2:50 PM GMT)

தி.மு.க.விற்கு தூக்கம் தொலைந்துவிட்டது என பிரதமர் மோடி கூறிய நிலையில் அவரது கருத்துக்கு தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே பிரதமர் மோடி தமிழ்நாடு, கேரளாவில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதல்முறையாக பிரதமர் மோடி நேற்று தமிழ்நாடு வந்தார். கோவை சென்ற பிரதமர் மோடி அங்கு வாகன பேரணி நடத்தினார். இதனை தொடர்ந்து இன்று காலை கேரளா மாநிலம் பாலக்காடு சென்ற பிரதமர் மோடி மதியம் மீண்டும் சேலம் வந்தார்.

சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி தி.மு.க.வை விமர்சித்து பேசினார். அவர் பேசுகையில், எனக்கு கிடைத்த ஆதரவால் தி.மு.க.விற்கு தூக்கம் தொலைந்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்ல வேண்டும்' இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" பிரதமர், அவர் தகுதிக்கு ஏற்ப பேசுகிறாரா?" பத்தாண்டு அழிவு ஆட்சியில் இருந்து விடுதலை பெற இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.

வாரம் தோறும் தமிழ்நாட்டுக்கு வருவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பிரதமர் மோடி இந்த வாரம் சேலத்தில் முழங்கிவிட்டுப் போயிருக்கிறார். பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தவர், தனது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டிருக்க வேண்டும். அப்படி ஏதும் இல்லாததால் வாய்ப்பு வந்ததை எல்லாம் பேசி இருக்கிறார்.

தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து தி.மு.க.வின் தூக்கம் தொலைந்து விட்டது'' எனப் பேசியிருக்கிறார். மோடி அவர்களே! உங்களுக்குத்தான் தூக்கம் தொலைந்துவிட்டது. அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பிவிட்டுப் போகிறீர்கள்.

கடந்த தேர்தல் காலங்களில் இந்திய பிரதமர்கள் ஓரிரு முறைதான் தமிழ்நாட்டிற்கு வந்து பிரசாரம் செய்துவிட்டு போனார்கள். ஆனால், உங்களுக்கு தூக்கம் வராததால் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, கோவை, சேலம் என அடிக்கடி தமிழகம் வந்து பிரசாரம் செய்கிறீர்கள். உங்கள் பிரதமர் பதவிக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவரும் தயாராகி விட்டார்கள்.

சேலம் ஆடிட்டர் ரமேஷ் குறித்து பேசி கண்ணீர் விட்டிருக்கிறார் மோடி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தான் சேலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் 2013ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 11 ஆண்டுகள் கழித்து இப்போது நினைவு கூறுவது ஏன்?

கோவையில் வாகன பேரணி நடத்திய போது 1998-ல் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படியான நாடகத்தை தேர்தலுக்காக பா.ஜ.க. நடத்த ஆரம்பித்திருக்கிறது. பிரதமர் மோடி வாகன பேரணி காட்டினாரே தவிர அதைப் பார்க்கத்தான் ஆள் இல்லை.

ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் சேலம் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், மதுரை சுரேஷ், வேலூர் அரவிந்தன், வெள்ளையப்பன், சென்னை சுரேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. ஆதரவாளர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். இதை எல்லாம் பழைய பா.ஜ.க.வினரிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளவும். அந்த ஜெயலலிதாவை தான் சேலம் கூட்டத்தில் புகழ்ந்து பேசி இருக்கிறார் பிரதமர் மோடி.

''ஜெயலலிதாவை திமுகவினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்துப் பாருங்கள்'' எனப் பேசியிருக்கிறார் மோடி. அந்த ஜெயலலிதா ஆட்சியில்தான் இவர்கள் கொல்லப்பட்டனர் என்பதை மோடி நினைத்து பார்க்க வேண்டும்.

எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மோடி புகழ்வதைப் பார்த்து அ.தி.மு.க.வினர் மிக ஏளனமாக பேட்டி அளித்தார்கள். எதற்காக இவர்கள் பேரை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று கூட வெளிப்படையாக பேட்டி அளித்தார்கள். ஆனாலும் ஜெயலலிதாவை மறக்கவில்லை மோடி.

'குஜராத் மோடியா? தமிழ்நாட்டு லேடியா?' என்று ஜெயலலிதா கேட்டதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை. மோடி வேண்டுமானால் மறந்திருக்கலாம். பதவி ஆசை அவரை பாடாகப்படுத்துகிறது. போகிற போக்கைப் பார்த்தால் ஜெயலலிதாவின் சமாதிக்கே சென்று கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்து விடுவார் போல!

"தி.மு.க., காங்கிரசின் ஊழலை பற்றி பேச ஒருநாள் போதாது'' எனச் சொல்லியிருக்கிறார் மோடி. ஊழலை பற்றி பேச மோடிக்கு தகுதி இருக்கிறதா? தேர்தல் பத்திரம் திட்டத்தில் பா.ஜ.க. நடத்திய தில்லுமுல்லு நாடு முழுவதும் நாறிக்கொண்டிருக்கிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நிதியில் 50 சதவிகிதத்திற்கு மேல் பா.ஜ.க.தான் வாங்கியது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற அதிகார அமைப்புகளை ஏவி, அதன் மூலம் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை மிரட்டிப் பறித்த பா.ஜ.க. உத்தமர் வேஷம் போடுகிறது. கொள்ளையை சட்டபூர்வமாக ஆக்கிய கட்சி பா.ஜ.க.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2 ஜி அலைக்கற்றை பற்றிப்பேசியிருக்கிறார் மோடி. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு 2017-ல் விடுதலை செய்துவிட்டது. அதன் பிறகும் தி.மு.க.வின் பங்கு பற்றி மோடி வலிந்து பேசிக்கொண்டிருக்கிறார். 2022 ஆகஸ்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போக வேண்டிய 5ஜி அலைக்கற்றை 1½ லட்சம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. மீதி பணம் யார் பாக்கெட்டிற்கு போனது? என மோடி பதில் சொல்வாரா?

பெண் சக்தி பற்றியெல்லாம் பெருமை பொங்கப்பேசியிருக்கிறார் மோடி. ''பெண்களுக்குச் சேவை செய்ய உறுதி ஏற்று இருக்கிறோம். பெண்கள்தான் பா.ஜ.க.வின் கவசமாக உள்ளது'' என்றெல்லாம் பொய்களைக் கொட்டியிருக்கிறார் மோடி.

மணிப்பூரில் நின்று மோடியால் இப்படி பேச முடியுமா? மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற காட்சிகள் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. அந்த மணிப்பூருக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் சொன்னாரா? அந்த பாவம் எல்லாம் எந்த கங்கையில் குளித்தாலும் போகாது.

"தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்றுவோம்" என்கிறார் மோடி. திருநெல்வேலியும், தூத்துக்குடியும், சென்னையும் பெருவெள்ளத்தில் சிக்கி பேரிடர் நிவாரணம் கேட்டு தமிழ்நாடு கையேந்திய போது ஒரு பைசாவும் தராத மோடிதான், தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்ற போகிறாராம்.

"ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்திலிருந்துதான் எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்க தொடங்கப் போகிறது" என சொல்லியிருக்கிறார் மோடி. பத்தாண்டு அழிவு ஆட்சியில் இருந்து மக்கள் விடுதலை பெற இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டார்கள். ஏப்ரல் 19-ம் தேதிதான் பா.ஜ.க.வுக்கு பேரழிவு காலம் தொடங்கப் போகிறது.

ஒரு பிரதமர், அவர் தனது தகுதிக்கு ஏற்ப பேச வேண்டும். பா.ஜ.க.வின் நாலாந்தர பேச்சாளரை போல பேசக்கூடாது. மீறி, மோடி அப்படி பேசுகிறார் என்றால் தோற்கப்போகிறோம் என்பதை அவரே உணர்ந்து விட்டார் என்பது தெரிகிறது. 400 தொகுதிகள் வெற்றி பெறப்போவதாக அவர் சொல்லிக்கொள்கிறார். உண்மையில் 400 தொகுதிகள் வெற்றி பெறப்போகிறவர் இப்படி தரந்தாழ்ந்து பேச மாட்டார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story