தமிழக கவர்னருக்கும் அரசுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள்...ரீவைண்ட்


தமிழக கவர்னருக்கும்  அரசுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள்...ரீவைண்ட்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 24 Dec 2023 4:50 PM GMT (Updated: 25 Dec 2023 12:49 AM GMT)

தமிழக அரசுக்கும், கவர்னர் ஆர்.என். ரவிக்கும் இடையே நீண்டகாலமாக பனிப்போர் நீடித்து வருகிறது.


தமிழ்நாடு கவர்னராக இருக்கும் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே இந்த ஆண்டு முழுவதுமே கருத்துமோதல் அதிகரித்து வந்தது.

தமிழக சட்சபையில் இருந்து வெளிநடப்பு செய்தது முதல் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டது வரை கவர்னருக்கும், அரசுக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் வெடித்தது. தற்போது இந்த பஞ்சாயத்து சுப்ரீம் கோர்ட் வரையிலும் சென்றுள்ளது. வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

2023 ஆம் ஆண்டு கவர்னருக்கும் தமிழக அரசுக்கும் இடையே நடைபெற்ற மோதல்கள் குறித்த முக்கிய அம்சங்களை இங்கு பார்க்கலாம்

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் சர்ச்சைக்குறிய கருத்துகளுக்குப் பஞ்சமில்லாத ஓர் கவர்னராக ஆர்.என்.ரவி பார்க்கப்படுகிறார். கவர்னராகப் பொறுப்பேற்றதில் இருந்து அவர் செல்லும் இடங்களிளெல்லாம் நீட், மும்மொழித்திட்டம், புதிய கல்விக்கொள்கை, சனாதனம், திராவிடம் என அவர் பேசிய பேச்சுக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

* தமிழ்நாட்டின் கவர்னராக பொறுப்பேற்ற பிறகு, முதன் முறையாக சுதந்திர தின விழா வாழ்த்துச் செய்தியில் ஒரு முக்கியமான வரியை குறிப்பிட்டிருந்தார். அந்த வாழ்த்துச் செய்தியில், நீட் தேர்வுக்கு பிறகு தான் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் அதிகளவு சேருவதாக கூறியிருந்தார். இதற்கு தமிழக எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. தமிழக அரசு சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தமிழகம்-தமிழ்நாடு

* 2023 ஜனவரி 4ம் தேதி அன்று கவர்னர் மாளிகையில் நிறைவடைந்த காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும் ஒரு மாத காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழ்நாடு என்று அழைப்பதை விட, தமிழகம் என்றால் தான் சரியாக இருக்கும்' என பேசி அடுத்த பிரச்சனைக்கு அடிகோளினார். இதனைத்தொடர்ந்து தமிழகம், தமிழ்நாடு என்ற வார்த்தைகள் மிகப்பெரிய சர்ச்சையானது.

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு

* தமிழ்நாடு சட்டசபையின் 16வது கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கியபோது, அரசு தயாரித்து கொடுத்திருந்த உரையில், சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அமைதிப்பூங்கா முதலான பல்வேறு சொற்களை, கவர்னர் ஆர்.என். ரவி படிக்கும்போது தவிர்த்தார்.

இதையடுத்து, கவர்னருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு அச்சிடப்பட்ட உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என தீர்மானத்தை வாசித்தார். இதனையடுத்து கவர்னர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். கூட்டம் முடியும் முன்பாகவே அவர் அவையை விட்டு வெளியேறியதால் விதிமுறைகளை மீறியதாக சர்ச்சை எழுந்தது.

திராவிட மாடல்

* கவர்னர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், திமுக தலைமையிலான, தமிழ்நாடு அரசு கூறி வரும் திராவிட மாடல் குறித்தும் விமர்சித்திருந்தார். அதில் "திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி. திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. அது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே. திராவிட மாடல் கொள்கைகள் 'ஒரே நாடு, ஒரே பாரதம்' கொள்கைக்கு எதிரானது. இந்த கொள்கை சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள், வரலாற்றை மறைக்க பார்க்கிறது" என்று தெரிவித்தார்.

* அதிகாரத்துக்காக மொழியின் அடிப்படையிலும் சாதியின் அடிப்படையிலும் இங்குள்ள கட்சியினர் அரசியல் செய்கின்றனர்; நாட்டு மக்களின் பார்வையைக் குறுக்கிவிட்டனர். தற்போது, திராவிடம் என்றால் தமிழகம் மட்டும் என்று பேசப்பட்டுவருகிறது. ஆனால், தேசியகீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டுமல்ல. தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களை உள்ளடக்கியது என்று கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

சனாதனம்

சனாதன தர்மம் தான் நம் பாரதத்தை உருவாக்கியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசியலமைப்புச் சட்டம், சனாதன தர்மத்தில் கூறப்பட்டிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றி கூறுகிறோம். அதையேதான் சனாதன தர்மமும் சொல்கிறது. ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்த நாடு உருவானது.

சனாதன தர்மம் என்பது விரிவானது. அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அனைத்தையும் உள்ளடக்கிய 'தர்மம்' என்று அழைக்கப்படும் பிரபஞ்ச சட்டத்தால் அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதாகும். இது சம்ஸ்கிருதத்தில் மட்டுமல்ல, நமது பண்டைய தமிழ்ப் பாடலான கணியன் பூங்குன்றனாரின் புறநானூறில்கூட `யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரிகளில் காணப்படுகிறது என்று கவர்னர் தெரிவித்திருந்தார்.

புதிய கல்வி கொள்கை

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது பாரதிதாசனும், பாரதியாரும் கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கம் கொண்ட புரட்சிகர ஆவணம் என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: வெளிநாட்டு நிதியே காரணம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையானது நாட்டின் 40 % காப்பர் தேவையைப் பூர்த்தி செய்து வந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு காப்பர் எந்த அளவுக்கு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மக்களை தூண்டிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்துவிட்டனர் என்று கவர்னர் குற்றம் சாட்டியிருந்தார்.

அத்தோடு மட்டுமின்றி பேரவை தீர்மானங்களை கவர்னர் நிலுவையில் வைத்தால் நாகரீகமாக ஒப்புதல் அளிக்கவில்லை என பொருள். வார்த்தை அலங்காரத்துக்காக நிறுத்தி வைப்பு என்கிறோம். நிறுத்தி வைத்தாலே நிராகரிக்கப்பட்டதாகத் தான் அர்த்தம் என்றும் அவர் தெரிவித்தார்.

நீட் தேர்வு விலக்கு - கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்த தமிழ்நாடு அரசு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரிய தமிழ்நாடு அரசின் மசோதாவை கவர்னர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வு ரத்து மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சரியான காரணங்களை அரசு தெரிவிக்க வேண்டும் என்று கவர்னர் ரவி கூறியிருந்தார்.

நீட் தேர்வு அவசியம் என சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டதையும் கவர்னர் சுட்டிக்காட்டி இருந்தார். இதற்குப் பிறகு மீண்டும் அனைத்துக் கட்சிக்கூட்டம் கூடி, தமிழ்நாடு அரசு சார்பாக மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த மசோதாக்களை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார். இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னர், காலத்தை வீணடிப்பதற்காகவே இவ்வாறான காரியங்களில் ஈடுபடுகிறார் என திமுகவினர் கருத்து தெரிவித்தனர்.

கவர்னருக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கடந்த நவம்பர் 18ஆம் தேதி சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை, கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், மீண்டும் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் அளிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட வேண்டும் எனவும் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அந்த கூடுதல் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திர சூட் கூறுகையில், "தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்துப் பேச முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தயார். கவர்னர் தாமாக முன் வந்து முதல்-அமைச்சரை சந்தித்துப் பேசி இருக்க வேண்டும். முதல்-அமைச்சருக்கும் கவர்னருக்கும் இடையே சுமூக உறவு இருந்தால்தான் பிரச்சனைகளை தீர்க்க முடியும். முட்டுக்கட்டையை தீர்க்க எதையாவது செய்ய முடியுமா எனப் பார்க்கிறோம். ஜனாதிபதிக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே இந்த விவகாரத்தை அட்டார்னி ஜெனரல் கவனிக்கும்படி அறிவுறுத்துகிறேன்" என்று அவர் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு ஜனவரி மாதம் 3 ஆம் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே இந்த பிரச்சனை தொடர்பாகத் தமிழக முதல்-அமைச்சரும் தமிழக கவர்னரும் அமர்ந்து பேசலாமே என சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் அறிவுறுத்திய நிலையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகப் பேச தமிழக முதல்-அமைச்சருக்கு கவர்னர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு தற்பொழுது புயல் நிவாரணப் பணிகள் மற்றும் மத்தியக் குழு ஆய்வு உள்ளிட்ட பணிகள் இருப்பதால் இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு வருவதாகத் தமிழக முதல்-அமைச்சர் தரப்பில் பதில் தகவல் கவர்னருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இப்படியான கருத்து மோதல் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு இதுபோன்ற எத்தனையோ உதாரணங்கள் எடுத்து கூறப்பட்டாலும், கவர்னர் உரைகளில் சர்ச்சையாக பேசுவதும், தமிழக அரசு அதற்கு பதிலடி தருவதும் என தொடர் கதையாகவே மாறியுள்ளது.

தமிழக அரசு, கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி கூட்டணிக் கட்சிகளோடு தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story