வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடரும் - சரத்பவார்


வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடரும் - சரத்பவார்
x

வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடரும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

கூட்டணி தொடரும்

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக சென்றதால் மகாவிகாஸ் ஆட்சி கவிழ்ந்தது. தற்போது மராட்டியத்தில் பா.ஜனதா ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இந்தநிலையில் அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற ேதா்தலில் மகாவிகாஸ் கூட்டணி தொடரும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

புரிதல் உள்ளது

இது குறித்து கோலாப்பூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் பால்தாக்கரே சிவசேனா வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தோ்தலை ஒன்றாக சந்திக்க வேண்டும் என்ற புரிதல் உள்ளது. குடியரசு கட்சி மற்றும் சில கட்சிகளும் சோ்க்கப்படும். இதுதொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகிறது. பல விவகாரங்களில் நாங்கள் சேர்ந்து முடிவு எடுத்து உள்ளோம். எனவே எந்த பிரச்சினையும் இல்லை.

தொண்டர்கள் ஆதரவு

சிவசேனா உடைந்து உள்ள போதும், பெரும்பான்மையான தொண்டர்கள் உத்தவ் தாக்கரேக்கு ஆதரவாக உள்ளனர். பிளவின் போது எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஷிண்டே அணிக்கு சென்று இருக்கலாம். ஆனால் தேர்தல் வரும் போது மக்களின் மனநிலையை அவர்கள் புரிந்து கொள்வார்கள். மராட்டிய-கர்நாடக எல்லை பிரச்சினை தொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

எல்லை பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அந்த வழக்கை மூத்த சட்ட வல்லுநர்களை வைத்து நமது தரப்பு வாதத்தை பலமாக முன்வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story