நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு


நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 8 March 2024 7:59 AM GMT (Updated: 8 March 2024 8:03 AM GMT)

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் தங்களுக்கு 2 தனித்தொகுதிகள், ஒரு பொதுத்தொகுதியும் என மொத்தம் 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்தது. அதேபோல், தனிச்சின்னத்தில் போட்டியிடவும் அனுமதிக்கும்படி கோரியிருந்தது. ஆனால், விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முன்வந்தது. இதனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் தொகுதி பங்கீடு தொடர்பான இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில், இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தி.மு.க. - விடுதலை சிறுத்தைகள் இடையே தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது. அதன்படி, தி. மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விடுதலை சிறுத்தைகளுக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனும் கையெழுத்திட்டுள்ளனர்.

ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லிக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story