கணவர் கடனை திரும்ப தராததால் பெண்ணை கத்தியால் வெட்ட முயன்ற 4 பேர் கைது


கணவர் கடனை திரும்ப தராததால் பெண்ணை கத்தியால் வெட்ட முயன்ற 4 பேர் கைது
x

சென்னை தியாகராயநகரில் கணவர் கடனை திரும்ப தராததால் பெண்ணை கத்தியால் வெட்ட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை தியாகராயநகர் எஸ்.பி.கார்டன் 70 அடி சாலையை சேர்ந்தவர் அய்யனார். இவர், தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள நடைபாதையில் பழக்கடை நடத்தி வருகிறார். இவர், பள்ளிக்கரணை காமாட்சி நகரை சேர்ந்த வெங்கடேசன் (வயது35) என்பவரிடம் பணம் கடனாக வாங்கி இருக்கிறார். அதை வெங்கடேசன் கேட்டபோது, அய்யனார் தன்னிடம் தற்போது பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், தனது நண்பர்கள் மேற்கு மாம்பலம் பிருந்தாவனம் தெரு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 38), வினோத் (31), செந்தில் (42) ஆகிய 3 பேருடன், ஆட்டோவில் அய்யனாரின் பழக்கடைக்கு வந்துள்ளார். அங்கு அவர் இல்லாததால் அய்யனாரின் மனைவி அல்லி (52) இடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அல்லியை வெட்ட முயன்றதுடன், அவர் வைத்திருந்த ரூ.1,000 பணத்தை பறித்தனர். கடையில் இருந்த எடை போடும் எந்திரம் போன்ற பொருட்களை உடைத்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஆட்டோவில் தப்பிச்சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து அல்லி, சவுந்தரபாண்டியனார் அங்காடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வெங்கடேசன் உள்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.


Next Story