மிக கனமழைக்கு வாய்ப்பு..!! செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு "ஆரஞ்சு எச்சரிக்கை"


மிக கனமழைக்கு வாய்ப்பு..!! செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 7 Jan 2024 9:16 PM GMT (Updated: 8 Jan 2024 12:14 AM GMT)

தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் மிக தீவிரம் அடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டங்களின் உள் பகுதிகளில் அனேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களின் உள் பகுதிகளிலும் மழை பெய்து இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, இன்று தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

இந்நிலையில் மிக கனமழை பெய்யக்கூடிய செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே இன்று அதிகாலை 4 மணி வரை தமிழகத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

நாளையும் (09-01-2024), நாளை மறுதினமும் (10-01-2024) தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

10-ந்தேதிக்கு (நாளை மறுதினம்) பிறகு மழைக்கான வாய்ப்பு அப்படியே குறையத் தொடங்குவதால், வடகிழக்கு பருவமழை அதனுடன் நிறைவு பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.


Next Story