செல்போனை கணவர் உடைத்ததால் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்


செல்போனை கணவர் உடைத்ததால் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்
x

செல்போனை கணவர் உடைத்ததால் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வசித்து வருபவர் கோபிநாத்(வயது 35). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி. படித்தார். அப்போது, சென்னை மூலகொத்தளம் பகுதியில் வசித்த விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தை சேர்ந்த பென்னரசி(29) என்பவருடன் கோபிநாத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டவே, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் விக்கிரவாண்டியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு கிருத்திகா(7) என்ற மகளும், மோனிஷ்(4) என்ற ஒரு மகனும் இருந்தனர்.

கோபிநாத் அரசு வேலையில் சேர டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு தயாராகி வருகிறார். இதற்காக ஒரு பயிற்சி நிறுவனத்திற்கு சென்று படித்து வந்தார். மேலும் தனது தந்தை நாகராஜ், தம்பி தினேஷ் ஆகியோருடன் சேர்ந்து மர இழைப்பகமும் நடத்தி வருகிறார்.

நேற்று காலை கோபிநாத் தனது மனைவி, குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு சென்றார். அங்கு பிரார்த்தனை முடிந்ததும் கோபிநாத் தனது மனைவி, குழந்தைகளை விக்கிரவாண்டி செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தார். பின்னர் அவர், தான் பயிற்சி பெறும் பயிற்சி நிறுவனத்துக்கு சென்றுவிட்டார்.

பயிற்சி முடிந்ததும் காலை 10.45 மணிக்கு கோபிநாத் வீடு திரும்பினார். அப்போது அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. இதனால் பதறிய கோபிநாத், உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு பென்னரசி, கிருத்திகா, மோனிஷ் ஆகியோர் தனித்தனி துப்பட்டாவில் தூக்கில் பிணமாக தொங்கினர். இதைப்பார்த்து கோபிநாத் கதறி அழுதார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கோபிநாத் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தனர். பென்னரசி அடிக்கடி தனது பெற்றோர் மற்றும் சிலரிடம் செல்போனில் பேசியுள்ளார். இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோபிநாத், அந்த செல்போனை உடைத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் குடும்ப பிரச்சினை காரணமாக பென்னரசி 2 குழந்தைகளையும் தனித்தனி துப்பட்டாவால் தூக்கிட்டு கொலை செய்து விட்டு, தானும் மற்றொரு துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story