எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.5 கோடி போதை பொருள் - உகாண்டா நாட்டு பெண் கைது


எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.5 கோடி போதை பொருள் - உகாண்டா நாட்டு பெண் கைது
x

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.5 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், உகாண்டா நாட்டு பெண்ணை கைது செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை, சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது உகாண்டா நாட்டை சேர்ந்த 35 வயது பெண்னை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக அவர் கூறினார். மேலும் அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது உகாண்டா பெண் கொண்டு வந்த அட்டைப்பெட்டிகளை மோப்ப நாய் 'ஒரியோ' சோதித்த போது, அதில் 'மேத்தோ குயிலோன்' என்ற போதை பொருள் பொட்டலங்களாக மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தது. மேலும் அவரது உடைமைகளில் ஹெராயின் போதை பொருள் மறைத்து வைத்து இருந்ததையும் கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.5 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 196 கிராம் 'மேத்தோ குயிலோன்' மற்றும் ஹெராயின் போதை பொருளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இவற்றை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண்ணை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதனை அவர் யாருக்காக கடத்தி வந்தார்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்?. சர்வதேச கடத்தல் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளதா?. சென்னையில் உள்ள கடத்தல் போதை கும்பல் யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


Next Story