பாஜக போட்டியிடவில்லை என்றால் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் நிச்சயம் களமிறக்கப்படுவார் - ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன்


பாஜக போட்டியிடவில்லை என்றால் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் நிச்சயம் களமிறக்கப்படுவார் - ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன்
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என்றால் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் நிச்சயம் களமிறக்கப்படுவார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன் கூறினார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இதனியடுத்து, ஈரோடு கிழக்க்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிருகிறார். தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. நாம் தமிழர் கட்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளது.

அதேவேளை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக நடவடிக்கைகளை அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக 117 பேர் கொண்ட தேர்தல் குழுவை எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். அந்த குழு களத்தில் தங்கள் பணிகளை தொடங்கிவிட்டன.

ஆனால், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக தற்போது இந்த இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால், எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக. ஏற்கனவே அக்கட்சியில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிப் பெற்று அமைச்சரான பலர் இருக்கின்றனர். பண பலம், படை பலம், அதிகார பலம் கொண்ட திமுகவை எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர் அங்கு நிற்க வேண்டும். அங்கு நிற்கக்கூடிய வேட்பாளருக்கு எல்லாவிதமான ஒத்துழைப்பும் வழங்க வேண்டியது எங்களது கடமை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த போதிலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா?, தேர்தலில் போட்டியிடாமல் விலகுமா?, யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவிக்குமா? அல்லது அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்குமா? என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சி வரும் 31-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா? இல்லையா? என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக போட்டியிட்டால் நாங்கள் விட்டு தருவோம்' என்று பாஜக ஆதரவு நிலைப்பட்டை ஓ.பன்னீர் செல்வம் எடுத்தார்.

பாஜக போட்டியிடவில்லை என்றால் நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம் இல்லையேல் பாஜகவுக்கு ஆதரவு அளிப்போம் என்று ஓபிஎஸ் கூறினார்.

இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக இருந்தால் முழு ஆதரவை கழகம் அவர்களுக்கு அளிக்கும் என்று ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

அவர்கள் எப்போது அதை அறிவித்தாலும் தேர்தல் பணியாற்ற தேர்தல் குழு தற்போது நியமிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என்று வேறு முடிவு எடுத்தால் ஓ.பன்னீர் செல்வம் வேட்பாளரை அறிவிப்பார்.

காங்கிரஸ் போட்டியிடுகிறபோது ஒரு தேசிய கட்சியாக பாஜக போட்டியிடுவது பொறுத்தமாக இருக்கும் என்ற கருத்தை வெளியிட்டார்கள்.

இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என்று அறிவிக்கும்பட்சத்தில் வேட்பாளரை அறிவிக்க ஓபிஎஸ் தயாராக உள்ளார். கூட்டணியில் உள்ள ஒருவருவருக்கு (பாஜக) ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை அவர்கள் (பாஜக) ஏற்றுக்கொள்வார்களா? இல்லையா? என்பதற்காக கால அவகாசம் உள்ளது. 31-ம் தேதி வேட்புமனு தாக்குதலுக்கு முன் அதிமுக நல்ல முடிவு எடுக்கும். வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.


Next Story