இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு; காசா போர் குறித்து ஆலோசனை


இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு; காசா போர் குறித்து ஆலோசனை
x

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார்.

ஜெருசலேம்,

காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 31 ஆயிரத்து 112 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 423 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரால் மேற்குகரையில் மக்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர். போரால் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மேற்குகரை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, எகிப்து, இஸ்ரேல் வழியாக காசா முனைக்கு மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டுவந்த நிலையில் பணய கைதிகளை விடுவிக்கும்வரை காசாவுக்கு உதவிகளை அனுப்ப அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதையடுத்து, சாலைமார்க்கமாக காசாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டுசெல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், விமானங்கள் மூலம் காசா முனையில் நிவாரண பொருட்களை எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் வீசின. அதேவேளை, காசாவுக்கு கூடுதலாக மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க இஸ்ரேலுக்கு பல்வேறு நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சந்தித்தார். இஸ்ரேல் சென்றுள்ள அஜித் தோவல் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு எதிரான போர், பணய கைதிகள் விடுதலை தொடர்பான முயற்சி, காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நெதன்யாகுவும், அஜித் தோவலும் ஆலோசனை நடத்தினர். காசாவில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் , இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Next Story