தமிழ்நாட்டில் பல துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளும், திட்டங்களும்

FILEPIC
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், தமிழ்நாடு அரசை சர்வதேச அளவில் உயர்த்திய மெகா திட்டமாகும்.
மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி
தமிழ்நாடு பட்ஜெட் 2025-26- ல் 2 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் 20 லட்சம் பேருக்கு அவர்களின் விருப்பத்தின்படி மடிக்கணினி அல்லது கைக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணினி பயன்பாட்டில் தேவை அதிகரித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை பெறும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, இந்த கல்வி ஆண்டில் தற்போது மூன்றாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்கள் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி டிசம்பர் 19-ம் தேதி வழங்கப்பட்டது.
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கை
தேசிய கல்விக் கொள்கை 2020 மாற்றாக தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்விக்கான பிரத்யேக மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்கப்பட்டது. ஆகஸ்ட் 8ம் தேதி அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முன்னதாக நீதிபதி டி.முருகேசன் தலைமையில் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டிற்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்கம் குழு அமைக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைகள், நிபுணர்கள், மாணவர்கள், பெற்றோர்களின் கருத்துகளின் அடிப்படையில் இறுதி மாநில கல்விக் கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இரு மொழிக் கொள்கை, ஆக்கப்பூர்வமான கற்றலை ஊக்குவிப்பது, 5 வயதில் பள்ளியில் முதலாம் வகுப்பு சேர்க்கை, புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தை அமைப்பது, 8-ம் வகுப்பு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி ஆகிய முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. குறிப்பாக, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. 2024-25 கல்வி ஆண்டு (நடப்பாண்டு) முதல் ரத்து அமல்படுத்தப்பட்டது. மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் வடிவமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. வரும் கல்வி ஆண்டில் இது அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலை உணவு திட்டம் விரிவாக்கம்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், தமிழ்நாடு அரசை சர்வதேச அளவில் உயர்த்திய மெகா திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளியில் காலை உணவு அரசினால் அளிக்கப்படும். காலையில் பள்ளிகளுக்கு மாணவர்கள் பசியோடு வருவதைத் தவிர்த்து, சத்து மிக்க உணவை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தொடங்கப்பட்ட திட்டம்.
முதன்முறையாக தமிழ்நாட்டில் 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. மதுரையில் உள்ள அரசு பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணாக்கர்கள் இதன் மூலம் பயனடைந்தனர். இதன் இரண்டாம் கட்டம் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள மற்ற அரசு தொடக்கப்பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் கீழ் 30,992 பள்ளிகளில் பயிலும் 18.50 லட்சம் மாணாக்கர்கள் பயனடைந்தனர்.
மூன்றாம் கட்டமாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2024-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி நகர்புற பகுடிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் கூடுதலாக 3 லட்சத்து 5 ஆயிரம் மாணக்கர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
அன்பு கரங்கள் திட்டம்
தமிழ்நாடு அரசின் மகத்தான திட்டங்களில் மற்றொன்று, அன்பு கரங்கள் திட்டம். பெற்றோரை இழந்த அல்லது பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளை தமிழ்நாடு அரசு பராமரித்து, கல்வியை தொடர வைப்பதை உறுதி செய்யும் திட்டமாகும். இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2025-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஆதரவற்ற குழந்தைகள் கல்வியை தொடரும் வகையில் மாதம் 2 ஆயிரம் ரூபாய், அவர்களது 18 வயது வரை அரசின் மூலம் வழங்கப்படும்.
அகல் விளக்கு திட்டம்,
பள்ளிக் கல்வித்துறையின் ஒரு முக்கிய திட்டம் அகல் விளக்கு திட்டம். 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு சமுக வலைத்தளங்கள் மற்றும் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இணையவழி குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் மனரீதியான ஆதரவிற்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
வாட்டர் பெல் திட்டம்
இந்த ஆண்டில் தொடங்கப்பட்ட மற்றொரு முக்கிய திட்டம் வாட்டர் பெல் திட்டம். அரசு பள்ளிகளில் இத்திட்டத்தின் கீழ் 1 நாளுக்கு 3 முறை வாட்டர் பெல் அடிக்கப்படும். மாணவர்கள் தினமும் போதுமன அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. காலை 11 மணிக்கு, பிற்பகல் 1 மணிக்கு மற்றும் மாலை 3 மணிக்கு என மூன்று முறை தண்ணீர் குடிப்பதை நினைவுப்படுத்தி வாட்டர் பெல் அடிக்கப்படுகிறது.
கல்லூரிகளில் 15 ஆயிரம் இடங்கள் சேர்ப்பு
தமிழ்நாட்டில் உயர்கல்வி சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களுக்கான கூடுதல் இடங்களை உருவாக்கிடும் வகையில், இந்தாண்டு புதியாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. மேலும், தமிழ்நாடு பட்ஜெட் 2025-ல் அறிவிக்கப்பட்டபடி, 15 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்பட்டன. இந்த கல்வி ஆண்டில் அரசு கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் இடங்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15 சதவீத இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் 10 சதவீத இடங்கள் சேர்க்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
புதிய பாடங்கள் உருவாக்கம்
செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம், எந்திரவியல், மின் வாகனத் தொழில்நுப்டம், சுற்றுச்சூழல் பொறியியல் உள்ளிட்ட புதிய படிப்புகள் அரசு கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன.
வெற்றி நிச்சயம் திட்டம்
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய முக்கிய திட்டம், வெற்றி நிச்சயம் திட்டம். படித்த இளைஞர்கள், படிப்பை முழுமையாக தொடர முடியாத இளைஞர்களுக்கு குறுகிய கால பயிற்சியுடன், வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் மகத்தான திட்டம் “வெற்றி நிச்சயம் திட்டம்”. இத்திட்டத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 1ம் தேதி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதற்கான ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 18 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு 500க்கு மேற்பட்ட முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் 38 தொழிற்பிரிவுகளில் 165 திறன் பயிற்சிகள் கட்டணமில்லாமல் இலவசமாக வழங்கப்படும். அப்பயிற்சிகளின் மூலம் வேலைவாய்ப்புகளை பெற வழிவகை செய்யப்படும்.
மேலும், இத்திட்டத்தின் சிறப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊக்கத்தொகையும் அரசு வழங்கும். கூடுதலாக தொலைத்தூரத்தில் இருந்து பயிற்சி பெற வரும் இளைஞர்களுக்கு உணவுடன் கூடிய இருப்பிட வசதியும் அரசு செய்து தரும்.
மூன்றாம் பாலின மாணவர்களுக்கு புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டம்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வியை தொடரும் வகையில் மாதம் ரூ.1,000 புதுமைப் பெண் திட்டத்தின் வழங்கப்படுகிறது. அதே போன்று, மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தில் ரூ.1,000 வழங்கப்படுகிறது. 2025-ம் ஆண்டில் இத்திட்டம் மூன்றாம் பாலின மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, இந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மூன்றாம் பாலின மாணவர்கள் உயர்கல்வியை தொடர மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
யு.பி.எஸ்.சி. தேர்வர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு மூன்று கட்டமாக நடைபெறும். தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் 100 குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கட்டணமில்லா பயிற்சியை வழங்கி வருகிறது. இத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஊக்கத்தொகை அரசின் மூலம் வழங்கப்படுகிறது.
முதல்நிலைத் தேர்விற்கு தயாராகும் 100 மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு ரூ.7,500 வழங்கும் திட்டம், முதன்மைத் தேர்விற்கு தகுதி அடையும் அனைத்து மாணவர்களுக்கும் ரூ.25,000 வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், 2025-26 தமிழ்நாடு பட்ஜெட்டில் முதன்மைத் தேர்வை தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2025-ம் ஆண்டில் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்விற்கு தகுதி அடைந்தவர்களுக்கு ரூ.50,000 அரசின் மூலம் முதன்முறையாக வழங்கப்பட்டது.
டிஎன் ஸ்பார்க் திட்டம்
பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு திறனை கற்பிக்கும் வகையில் டிஎன் ஸ்பார்க் திட்டம் 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மற்றும் ஆன்லைன் கருவிகளை எப்படி பயன்படுத்துவது உள்ளிட்ட திறன் சார்ந்த பயிற்சி அளிக்கப்படும். இதற்கான பாடப்புத்தகங்களையும் அரசு வெளியிட்டது.
‘முதல்-அமைச்சரின் தாயுமானவர்’ திட்டம் விரிவாக்கம்
தமிழக மக்கள் மீது அக்கறை கொண்டு ஏராளமான நலத்திட்டங்களை தமிழக அரசு செயல் படுத்தி வருகிறது. அந்த வகையில், ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு வரும் முதியோர் சிரமப்படுவதை தவிர்க்க அரசு திட்டமிட்டது. அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்க புதிய திட்டத்தை அரசு அறிவித்தது.
அதுதான் ‘முதல்-அமைச்சரின் தாயுமானவர்’ திட்டம். இ்ந்த திட்டத்தின்படி 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
‘அன்புச்சோலை’ புதிய திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மதிய உணவு. யோகா பயிற்சி, பொழுதுபோக்கு அம்சங்களுடன் முதியோர்களுக்காக ‘அன்புச்சோலை’ என்ற பெயரில் தமிழகத்தில் 25 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பராமரிப்பு மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்பை உறுதி செய்யும் வகையில் கடந்த பட்ஜெட்டின்போது புதிதாக ‘அன்புச்சோலை' திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் முதியோர் மனமகிழ் வள மையம் எனும் அன்புச்சோலை மையங்கள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா 2 மையங்களும், பெருநகர சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களிலும், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா ஒரு மையம் என்று 25 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.






