இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 27-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 Oct 2025 1:24 PM IST
வடகிழக்கு பருவமழை மற்றும் புயலை முன்னிட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டிற்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டு உள்ளது. இதேபோன்று நீலகிரி, கோவை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டு உள்ளது.
- 27 Oct 2025 1:20 PM IST
எப்போது மாறுவார்கள்?...பிக் பாஸ் மீது கோபத்தை வெளிப்படுத்திய சீரியல் நடிகை
தெலுங்கு சீரியல் நடிகை அன்ஷு ரெட்டி பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ குறித்து பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்தார்.
- 27 Oct 2025 12:57 PM IST
திடீரென வேகம் அதிகரித்த மோந்தா புயல்
இந்நிலையில், மதியம் 12.30 மணி நிலவரப்படி சென்னைக்கு 480 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கே புயல் மையம் கொண்டுள்ளது. இதேபோன்று புயலின் வேகம் மணிக்கு 16 கி.மீ. என்பதில் இருந்து மணிக்கு 18 கி.மீ. ஆக அதிகரித்து உள்ளது.
- 27 Oct 2025 12:56 PM IST
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொரு குடும்பத்தினரையும் விஜய் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். உயிரிழந்தவர்கள் குடும்பத்தின் மருத்துவம், கல்வி செலவுகளை ஏற்பதுடன் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் விஜய் உறுதியளித்து உள்ளார்.
- 27 Oct 2025 12:39 PM IST
தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை - சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்
கரூர் கூட்ட நெரிசல், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெரிமுறைகள் வகுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது, கட்சி கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தவெக தரப்பில் வாதிடப்பட்டது. சில கட்சிகளுக்கு 11 நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. சில கட்சிகளுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படுவதில்லை என தவெக வாதிட்டது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படவில்லை என்றார். மேலும், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என வாதிட்டார். வழக்கு விசாரணை ஐகோட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- 27 Oct 2025 12:35 PM IST
சூரியகாந்தை சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரைத்த பி.ஆர்.கவாய்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் செயல்பட்டு வருகிறார். இவர் அடுத்த மாதம் 23ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணியை மத்திய சட்ட அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக சூரியகாந்தை நியமிக்க சட்ட அமைச்சகத்திற்கு தலைமை நீதிபதி கவாய் பரிந்துரை செய்துள்ளார்.
தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் மூத்த நீதிபதியாக உள்ள சூரியகாந்த் சுப்ரீம் கோட்டின் 53வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 2026 ஆண்டு பிப்ரவரி 9ம் தேதிவரை தலைமை நீதிபதியாக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
- 27 Oct 2025 11:42 AM IST
ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்: 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி
பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் நேற்றுமுன் தினம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாகிஸ்தான் பாதுகாப்புப்படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்றதாகவும் அப்போது நடந்த மோதலில் 25 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மோதலால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
- 27 Oct 2025 11:01 AM IST
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதான வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில், முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக அவர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தலைமை நீதிபதி அமர்வு இதற்கு அனுமதி அளித்து, அவருடைய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.
- 27 Oct 2025 11:00 AM IST
10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 27 Oct 2025 10:37 AM IST
திருச்சியில் ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து - 21 பயணிகள் படுகாயம்
இன்று அதிகாலையில் திருச்சி மாவட்டம் சிலையாத்தி அருகே திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் இருந்த அய்யன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த 21 பயணிகள் படுகாயமடைந்தனர்.


















