பாகிஸ்தானுக்கு பேரிடி.. வான் பாதுகாப்பு அமைப்பை அழித்த இந்திய ராணுவம்

பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ராடார்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
புதுடெல்லி,
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பாகிஸ்தானின் எந்த ராணுவ நிலைகளும் குறிவைக்கப்படவில்லை. ஆனால் பாகிஸ்தான் ராணுவமோ இந்திய ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதலில் இறங்கியது. மேலும் பொதுமக்கள் வாழும் பகுதிகளையும் இலக்காக கொண்டிருந்தது.
அந்தவகையில் அவந்திப்புரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகார், நால், பலோடி, உத்தர்லாய், பூஜ் என காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மாநிலங்களின் 15 முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதலை தொடுத்தது.
ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் எல்லைக்கு அப்பால் இருந்து தாக்குதலை அரங்கேற்றியது. பாகிஸ்தானின் இந்த ஆயுதங்கள் அனைத்தையும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான ஒருங்கிணைந்த டிரோன் எதிர்ப்பு தளவாடங்கள் நடுவானிலேயே வழிமறித்து அழித்தன.
இதனால் உடைந்து விழுந்த பாகிஸ்தான் ஆயுதங்களின் பாகங்கள் அனைத்தும் இந்திய எல்லைப்பகுதிகளில் இருந்து ஆங்காங்கே கைப்பற்றப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பஞ்சாப்பின் அமிர்தசரஸ், குஜராத்தின் கட்ச் பகுதிகளில் இருந்து உடைந்த டிரோன் பாகங்கள் மீட்கப்பட்டன.
ஒருபுறம் பாகிஸ்தானின் டிரோன்கள், ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் மறுபுறம் பாகிஸ்தானை நோக்கியும் தாக்குதல் நடத்தப்பட்டன. குறிப்பாக பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ராடார்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்கியது. பாகிஸ்தான் தாக்கிய அதே வீரியத்துடன் இந்தியா படைகளும் எதிர் தாக்குதல் நடத்தின.
இந்தியாவின் இந்த அதிரடியில் லாகூர் வான் பாதுகாப்பு அமைப்பு சின்னாபின்னமானது. இது பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது. இதனிடையே இந்தியா அனுப்பிய சுமார் 25 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும், அவை அனைத்தும் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹரோப் டிரோன்கள் என்றும் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி கூறினார்.