கடன்-குடும்ப பிரச்சினையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை

ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருவர் கடன் மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி, 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தார்.
கடன்-குடும்ப பிரச்சினையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை
Published on

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள பர்தாகி கிராமத்தை சேர்ந்தவர் வீரேந்திர மஞ்சி (வயது 30). இவரது மனைவி ஆர்த்தி குமாரி(26). இந்த தம்பதிக்கு ருகி குமாரி(4) என்ற மகளும், விராஜ்குமார்(2) என்ற மகனும் இருந்தனர். நேற்று முன்தினம் வீரேந்திர மஞ்சி, தனது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது வீட்டில் மனைவி, குழந்தைகள் இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்களது மகளுக்கு நீண்டகாலமாக தீராத நோய் இருந்ததால் சிகிச்சைக்கு அடிக்கடி பணம் தேவைப்பட்டது. இதனால் கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுபோன்ற குடும்ப சிக்கல்களால் கடந்த 7 மாதங்களாக ஆர்த்தி குமாரி தனது குழந்தைகளுடன், தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்புதான் அவர் கணவரின் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போதும் கணவன் மனைவிக்கு இடையே சண்டை நடந்துள்ளது.

இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் வீரேந்திர மஞ்சி தனது மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் இறந்துவிட்டார். பின்னர் குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com