நீங்கள் சிரித்தால் சரி, நாங்கள் சிரித்தால் தவறா? - உதயநிதி ஸ்டாலினை விளாசிய எடப்பாடி பழனிசாமி


நீங்கள் சிரித்தால் சரி, நாங்கள் சிரித்தால் தவறா? - உதயநிதி ஸ்டாலினை விளாசிய எடப்பாடி பழனிசாமி
x

உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை காட்டி எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.

தூத்துக்குடி,

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஒரேகட்டமாக வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரம், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தூத்துக்குடியில் அ.தி.மு.க. வேட்பாளர் சிவசாமியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற அ.தி.மு.க. பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இனி வெற்றிதான். 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தான் அ.தி.மு.க.வின் லட்சியம்

ஒரு புயல்தான் வந்தது அதற்கே தி.மு.க. ஆட்சி ஆடி போய் விட்டது. ஆனால் கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் எத்தனையோ இயற்கைப் பேரிடர்கள் வந்தது அப்போது நாம் திறமையாக செயல்பட்டோம். டிசம்பர் மாதம் பெய்த மழையின்போது என்னால் முடிந்த நிவாரண உதவிகளை வழங்கினேன்.

டிசம்பர் மாதம் சென்னை வானிலை ஆய்வு மையம் மழை வரும் என அறிக்கை விட்டது. ஆனால் தி.மு.க. அரசு எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. வெள்ள காலங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லாமல், டெல்லியில் கூட்டணி பேச சென்று விட்டார். மழை பாதித்த விவசாயிகளுக்கும், பழுதான வாகனங்களுக்கும் இழப்பீடு தராத அரசு தி.மு.க. அரசு.

அ.தி.மு.க. யாருக்கும் மறைமுகமாக ஆதரவை தரமாட்டோம். அ.தி.மு.க.வுக்கு பதவி வெறி கிடையாது. அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் சேர்ந்து பலம் வாய்ந்த கூட்டணியாக மாறியுள்ளது. கள்ளக்கூட்டணியை யார் வைத்துள்ளனர் என்பது மக்களுக்கு தெரியும்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி,

மோடி - மு.க.ஸ்டாலின் சந்தித்த படங்களை காண்பித்து யார் கள்ளக்கூட்டணி வைத்துள்ளனர் என கேள்வி எழுப்பினார்.

உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, நான் சிரித்தால் பல் தெரியும், உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார் 2019ல் மதுரையில் ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். அப்போது நானும் அவருடன் அமர்ந்திருந்தேன். அதை உதயநிதி ஸ்டாலின் கொச்சைப்படுத்தி அதில் அவர் பல்லை காட்டிக்கொண்டிருகிறார் என்று பேசினார்' என்றார்

பின்னர் உதயநிதி ஸ்டாலினும், பிரதமர் மோடியும் இருக்கும்புகைப்படத்தை காட்டிய எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலினும் பல்லைதான் காட்டிக்கொண்டிருக்கிறார் என்றார். மேலும், நீங்கள் சிரித்தால் சரி, நாங்கள் சிரித்தால் தவறா? நான் சிரிப்பது தவறா? ஸ்டாலினிடம் சிரிப்பே வராது' என்றார்.


Next Story