ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 5 பேர் பலி


ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 5 பேர் பலி
x

செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சனா,

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் 3 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது.

இதனிடையே, இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இன்று அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து நடத்திய தாக்குதலில் தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story