தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? - வெளியான விவரம்


தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? - வெளியான விவரம்
x
தினத்தந்தி 17 March 2024 4:22 PM GMT (Updated: 17 March 2024 4:41 PM GMT)

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி குறித்த தகவலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

டெல்லி,

தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி வழங்கும் வகையில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் கொண்டுவரப்பட்டது.

எஸ்.பி.ஐ. வங்கி மூலம் இந்த தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்று குவித்தன.

இதனிடையே, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதிபெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15ம் தேதி ரத்து செய்தது.

மேலும், 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் தற்போதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? அரசியல் கட்சிகளுக்கு யார்? யார்? நிதி கொடுத்துள்ளனர் என்ற விவரத்தை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யும்படி எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், எஸ்.பி.ஐ. வங்கி அளிக்கும் விவரங்களை தேர்தல் ஆணையம் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவையடுத்து தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி குறித்த விவரத்தை எஸ்.பி.ஐ. வங்கி தலைமை தேர்தல் ஆணையத்திடம் அளித்தது. அந்த விவரங்களை தலைமை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதில், தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட 2018ம் ஆண்டு முதல் அதன்மூலம் அதிக நிதி பெற்ற கட்சிகள் பட்டியலில் பா.ஜ.க. முதல் இடத்தில் உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. சுமார் 7 ஆயிரம் ரூபாய் நிதி பெற்றுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி பெற்ற அரசியல் கட்சிகளின் விவரம்:-

பா.ஜ.க. - ரூ. 6 ஆயிரத்து 986 கோடி

திரிணாமுல் காங்கிரஸ் - ரூ. 1 ஆயிரத்து 397 கோடி

காங்கிரஸ் - ரூ. 1 ஆயிரத்து 334 கோடி

பாரதிய ராஷ்டிரிய சமிதி - ரூ. 1 ஆயிரத்து 322 கோடி

பிஜு ஜனதா தளம் - ரூ. 944 கோடி

தி.மு.க. - ரூ. 656 கோடி

ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - ரூ. 442 கோடி

தெலுங்கு தேசம் - ரூ. 181 கோடி

மதச்சார்பற்ற ஜனதா தளம் - ரூ. 89 கோடி

சிவசேனா - ரூ. 60 கோடி

ராஷ்டிரிய ஜனதா தளம் - ரூ. 56 கோடி

சமாஜ்வாதி - ரூ. 14 கோடி

சிரோமணி அகாலி தளம் - ரூ. 7 கோடி

அ.தி.மு.க. - ரூ. 6 கோடி

தேசிய மாநாட்டு கட்சி - ரூ. 50 லட்சம்

தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தவித நிதியும் பெறவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.


Next Story