23 பாகிஸ்தானியர்களுடன் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பலை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை; சரணடைந்த கொள்ளையர்கள்


23 பாகிஸ்தானியர்களுடன் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பலை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை; சரணடைந்த கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 29 March 2024 9:17 PM GMT (Updated: 30 March 2024 3:25 PM GMT)

அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பலை இந்திய கடற்படை மீட்டுள்ளது

டெல்லி,

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், சரக்கு கப்பல்களை கடத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி கடற்கொள்ளையர்களும் கப்பல்களை கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரபிக்கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் ஈரானிய மீன்பிடி கப்பலில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் பயணித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் ஏடன் வளைகுடா பகுதியில் சகொட்ரா என்ற பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த மீன்பிடி கப்பலுக்குள் ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்கள் 9 பேர் நுழைந்தனர். கடற்கொள்ளையர்கள் கப்பலை கடத்த முயன்றனர். இதையடுத்து, மீன்பிடி கப்பலில் இருந்து உதவிகோரி அவரச அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய கடற்படை போர் கப்பல்கள் மீட்பு பணிக்காக விரைந்தன. சுமார் 12 மணிநேர தீவிர முயற்சிக்குப்பின் இந்திய கடற்படையிடம் கொள்ளையர்கள் சரணடைந்தனர். மீன்பிடி கப்பலில் இருந்த 23 பாகிஸ்தானியர்களையும் இந்திய கடற்படையினர் மீட்டனர்.


Next Story